ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டுகள் சிறை

பிரேசில் நாட்டில் 1990 முதல் 1992 வரை அதிபராக இருந்தவர் பெர்னாண்டோ காலர் டி மெல்லோ (வயது 73). இவர் அங்கு ராணுவ ஆட்சி நடந்த 1964-1985 காலகட்டத்துக்கு பின்னர் ஜனநாயக முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார். இவர் ஒரு துணிச்சலான அரசியல்வாதியாக இருந்தார்.

ஆனால் பதவியேற்ற 2 ஆண்டுகளிலேயே அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க முயன்றதால் இவரது செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் துணை நிறுவனத்துடன் ஒரு கட்டுமான நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்ய சுமார் 6 மில்லியன் டாலர் லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

ராஜினாமா செய்த அதிபர் இந்த நிலையில் பெர்னாண்டோவுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினர். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பான வழக்கு அந்த நாட்டின் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் பெர்னாண்டோ பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் 40-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் அவருக்கு சொந்தமான 65 நிறுவனங்களின் கணக்குகள் மூலமாகவும் பணமோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேல்முறையீடு இதனையடுத்து இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியானது. அதில் பெர்னாண்டோ மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 8 ஆண்டு 10 மாதம் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பெர்னாண்டோ முற்றிலும் மறுத்துள்ளார். எனவே இந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வக்கீல் கூறி உள்ளார். முன்னாள் அதிபருக்கே சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here