வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் சிறந்த அடைவை எட்டுவதற்காக பக்காத்தான் ஹராப்பான் (PH) தனது சமூக ஊடகம் மூலமான பிரச்சாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று, பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த 15வது பொதுத் தேர்தலில் சிறந்த பலனைப் பெற்ற பெரிகாத்தான் நேஷனல் (PN) போட்டியாளர்கள், இன்ஸ்டாகிராம் அல்லது டிக்டாக் போன்ற தளங்களுக்கு “தாமதமாக வந்தவர்” என்பதை பக்காத்தான் ஹராப்பான் நினைவில் கொள்ளவேண்டும் என்றார்.
இதில் ஒரு துரதிஷ்டம் என்னவென்றால், கடந்த 15வது பொதுத் தேர்தலில் “எங்கள் முயற்சிகளில் பெரும்பகுதி PN இலிருந்து கிளப்பிவிடப்பட்ட அனைத்து போலிச் செய்திகளையும், வெறுப்பையும் தெளிவுபடுத்துவதற்காக செலவிடப்பட்டது” என்று, நேற்று மாலை குபாங் செமாங்கில் பினாங்கு பிகேஆர் மற்றும் மகளிர் பிரிவுகளின் தேர்தல் பிரச்சாரத்தினை அறிமுகப்படுத்தியபோது நூருல் இசா தெரிவித்தார்.
“எங்கள் வாக்காளர்களுக்கு விரிவான மற்றும் துல்லியமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் தற்போது அனைவரும் குறிப்பாக மூத்த குடிமக்களும் சமூக ஊடகங்களை சுலாபமாக கையாளுவதால், இம்முயற்சி கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் பெரும் பங்காற்றும்” என்று அவர் மேலும் கூறினார்.