பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் அரசியலில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் பாகிஸ்தானை இந்தியாவோடு ஒப்பீடு செய்து பேசியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்காக உலக நாடுகளின் உதவியை நாடி வருகிறது. இது குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான மவுலானா ஃபஸ்லூர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அப்போது, ஒரே காலகட்டத்தில் அதாவது 1947-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியாவோ தன்னை வல்லரசு நாடாக்க முயற்சித்து வருகிறது. நாமோ அரசு திவாலாகாமல் இருக்க உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என கோபமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதோடு வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானிலோ பொருளாதார தேக்கம் மட்டுமே உள்ளது. சில சக்திகள் நாட்டின் வளர்ச்சியை தடுக்கின்றன. நாமோ பொம்மை போல் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு இதை எதிர்த்து போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது.எனப் பேசினார்.





















