தலைநகர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர், ஆணையர் டத்தோ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை (ஜூன் 8) ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பில் டாங் வாங்கி மாவட்ட போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில், 21 மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தக் கும்பல் குறிப்பிட்ட லாபத்துடன் ஃபேஸ்புக் மூலம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் சேவையை வழங்குகிறது. ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் 100 ஆஸ்திரேலிய டாலர்கள் (RM308) முதல் 1,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (RM3,086) வரை பேக்கேஜ் சலுகையைப் பொறுத்து உறுப்பினர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
“இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தயாரிப்பை விளம்பரப்படுத்திய பிறகு வாக்குறுதியளிக்கப்பட்ட கட்டணத்தை அவர்கள் பெறவில்லை. இது, அவர்களை ஏமாற்றுவதற்காக கும்பல் செய்த ஒரு தந்திரம் மட்டுமே” என்று இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 9) கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இந்தக் கும்பல் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது, என்றார்.
“இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் மோசடியை விளம்பரப்படுத்தினார்கள், இக்குழுவின் வேறு உறுப்பினர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக நாங்கள் நம்புகிறோம், அவர்களைக் கண்காணித்து வருகிறோம், என்றும் அவர் மேலும் கூறினார்.