கோலாலம்பூர், ஜூலை 6-
குற்றச்செயல்களுக்கு எதிராகப் போராடுவதில் போலீஸ் படையின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு 7,000 கேமராக்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக 129 நிறுவனங்கள் சமர்ப்பித்த டெண்டரை மதிப்பீடு செய்த பின்னர் உள்துறை அமைச்சீம் போலீஸ் படையும் இவற்றைச் கொள்முதல் செய்யும் பணியில் இறங்கும் என புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தளவாட, தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநர் சஹாபுடின் அப்துல் மனான் கூறினார்.
குத்தகையில் வெற்றி பெறும் நிறுவனத்திடமிருந்து ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இந்த வகை கேமராக்கள் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குத்தகைகள் வழங்குவதில் முறையான நிர்வாக நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டியிருப்பதால் இந்த கேமராக்களைக் கொள்முதல் செய்ய காலம் பிடிப்பதாகவும் அவர் விவரித்தார்.
இந்த வகை கேமராக்களின் தேர்வு விவரக்குறிப்பு தேவைகளைப் பொறுத்தது. இது மோட்டார் சைக்கிள் ரோந்துப் பிரிவு, பல்நோக்கு வாகனங்கள், போக்கு வரத்துப் பிரிவுக்கு சமூகக் குற்றங்களைக் கையாள்வதில் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
அடுத்தாண்டு முதல் காலாண்டில் இந்த வகை கேமராக்கள், பயிற்சிக்காக அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதுமுள்ள போலீஸ் படை அதிகாரிகளின் இந்த வகை கேமராக்களின் பயன்பாடு இந்த ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கடந்த ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியிருந்தார்.
இந்த கேமராக்களின் பயன்பாடு சாட்சியங்களைச் சேகரிப்பதை எளிதாக்குவதோடு காவல்துறையின் நேர்மையையும் மேலும் உயர்த்தும். ஆனால், எந்தத் தரப்பினராலும் அது தவறாகக் கையாளப்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.