விஜய், சமந்தாவை அடுத்து நடிகை மீரா ஜாஸ்மினும் சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
“எனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பின்னர் மீண்டும் வந்து பிடித்தமான படங்களில் நடிக்கலாமென திட்டமிட்டுள்ளேன்,” என்று ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
“நான் ஏற்கெனவே மாதவன், சித்தார்த்துடன் நடித்துள்ளேன். இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களைத் தயாரித்த சசிகாந்த் படத்தில் பங்குபெற்றது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன்.
“இதுவரை சிறப்பான பயணமாகவே எனது திரைப்பயணம் இருந்து வந்துள்ளது. நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது,” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார்.