போர்ட்டிக்சன்:
நெகிரி செம்பிலானில் உள்ள போர்ட்டிக்சனில் சிப்பிகளை சாப்பிட்டதாக நம்பப்படும் எண்மர், உணவு விஷமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக நெகிரிசெம்பிலான் சுகாதாரத் துறை இயக்குநர் ஹார்லினா அப்துல் ரஷித் கூறினார்.
மற்ற ஐவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சையைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
எட்டுப் பேரும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், போர்ட்டிக்சன் மாவட்டத்தில் உள்ள இரண்டு சந்தைகளிலிருந்து வாங்கிய சிப்பிகளையே அவர்கள் உண்டனர் என்றும் டாக்டர் ஹார்லினா கூறினார்.
அதன் பிறகு அவர்களுக்குத் தலைவலி, கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை, தசை வலுவிழப்பு போன்ற அசெளகரியங்கள் ஏற்பட்டன.
இது தொடர்பில் அரசாங்கச் சுகாதாரத் துறையும், மீன்பிடித் துறைகளும் விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும், சிப்பிகளின் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சிப்பிகளைச் சாப்பிட்ட பிறகு இது போன்ற அறிகுறிகளை உணர்வோர் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும் என்றும் டாக்டர் ஹார்லினா ஆலோசனை வழங்கினார்.