இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் என்கிறார் ரணில் விக்ரமசிங்கே

இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார்.

அப்போது இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய அவர் “ஜப்பான், கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் கிழக்கு ஆசியா 75 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.

இ்ப்போது இந்தியாவுக்கான நேரம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் இந்தியா வளர்ச்சியை காண்கிறது” என்றார்.

முன்னதாக உரையாற்றிய இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தின் தலைவர் டி.எஸ். பிரகாஷ் இலங்கைப் பொருளாதாரத்தில் இந்திய ரூபாயை மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ரணில், “இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான பொதுவான நாணயமாக மாறினால் அதை பயன்படுத்துவதில் இலங்கைக்கு எந்த தயக்கமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை வெளியுலகில் இருந்து எடுத்துக் கொள்ள நாம் மனதை விசாலமாக வைத்திருக்க வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், “உலகம் வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது” எனதெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here