செர்டாங்: காரை தீ வைத்து எரித்ததில் சிலரிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தை அடுத்து நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் செர்டாங் போலீஸ் தலைமையகத்திற்கு சற்று தொலைவில் நடந்தது.
புதன்கிழமை (செப். 29) மாலை 4 மணியளவில் பண்டார் கின்ராரா, ஜாலான் பி.கே .5 ல் நடந்த ஒரு முரண்பாடு குறித்து காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செர்டாங் OCPD துணை ஆணையர் A. A. அன்பழகன் கூறினார்.
“சந்தேக நபர்களில் ஒருவர் அங்குள்ள சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் வாஜா வகை காரின் கண்ணாடிகளை உடைக்க கல்லைப் பயன்படுத்தியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது “ என்றார்.
மேலும் “சந்தேக நபர் அதிக கோபமடைந்து கூச்சலிட்டதுடன் மற்றவர்களையும் தூண்டிவிட்டார்,” என்று அவர் வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் கூறினார். அத்தோடு இந்த சம்பவம் தொடர்பான நான்கு வீடியோக்களையும் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
“நேற்று இரவு 8.40 மணியளவில் போலீசாருக்கு கார் தீப்பிடித்ததாக தகவல் கிடைத்தது. இச் சம்பவத்தை தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்தோம்,” என்று அவர் கூறினார்.
மேலும், காருக்கு தீ வைத்ததை ஒப்புக்கொண்ட 42 வயதுடைய மற்றொரு சந்தேக நபரையும் போலீசார் கைது செய்தனர் என்றார்.
இரு தரப்பினருக்கு இடையே முகநூலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டதாக நம்பப்படுகின்றது.
எரிக்கப்பட்ட காரின் உரிமையாளரிடம் குற்றவியல் விசாரணைகளையும் போலீசார் தொடங்கியுள்ளனர்.” விசாரணைக்கு உதவும் வகையில் அனைத்து சந்தேக நபர்களையும் நாங்கள் ரிமாண்ட் செய்துள்ளோம்,” என்றார்.
பொது ஒழுங்கை அச்சுறுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.




















