ஹஜ் யாத்திரை செல்வதற்காக ஒரு மூதாட்டி சேர்த்துவைத்த சுமார் RM30,000 பணநோட்டுக்களை கரையான்களால் சேதமாக்கியதால், அடுத்த ஆண்டு ஹஜ்ஜூக்கு செல்ல வேண்டும் என்ற அவரது கனவு தவிடுபொடியாகியுள்ளது.
குறித்த மூதாட்டியின் பேரன், முஹமட் கைருல் அஸ்ஹர் மத் நவி கூறுகையில், ஜைனப் சுலோங் அல்லது மெக் நாப் என்று அழைக்கப்படும் அவரது பாட்டி, கடந்த சில ஆண்டுகளாக சிறிய அளவிலான கேக் வியாபாரத்தில் இருந்து குறித்த பணத்தை சேமித்தார் என்றார்.
“ஆனால், அவர் தனது வீட்டில் பெட்டியின் கீழ் துணியில் இவ்வளவு பணத்தை வைத்திருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது, எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் அதை அனுமதித்திருக்க மாட்டோம்.
“என் பாட்டிக்கு 72 வயதாகிறது, வங்கியில் இருப்பதை விட வீட்டில் சேமிப்பது எளிதானது என்று அவர் நினைத்திருக்கலாம்,” என்று கூறிய குவா ,மூசாங்கில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான அவர், தனது பாட்டியின் சேமிப்பை கரையான் தின்றுவிட்டதாக கூறி சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.
“இந்தப் பணத்தில் மலேசியா மற்றும் தாய்லாந்து நாட்டு நாணய நோட்டுகள் இருந்தது என்றும் அவற்றின் மதிப்பு சுமார் 30,000 ரிங்கிட் வரை உள்ளது என்றும், பணத்தை நீண்ட நாட்களாக திறந்து பார்க்காததால் கரையான்கள் தின்றுவிட்டன” என்று அவர் கூறினார்.
மேலும் “உண்மையில், நான் குவா மூசாங்கில் உள்ள ஒரு வங்கிக்கு பணத்தின் படத்தைக் காட்டி இந்த சிக்கலைப் பற்றி கேட்கச் சென்றேன், ஆனால் சேதத்தின் அளவைப் பார்த்து, அதற்கு பதிலாக புதிய பணத்தை மாற்ற முடியாது என்று வங்கி என்னிடம் கூறியது.
“பணத்தின் சேதத்தின் மதிப்பு 50 சதவீதத்தைத் தாண்டினால், எதுவும் செய்ய முடியாது, ஆனால் கரையான் அரித்த உண்மையான பணத்தைப் பார்த்து சேதத்தின் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்,” என்று அவர் கதையை நேற்று பேஸ்புக்கில் பதிவேற்றி, தனது துயரத்தினை பகிர்ந்துகொண்டார்.