பிரபல தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு, தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’, ராதா மோகன் இயக்கிய ‘காற்றின் மொழி’ படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக சேவை பணிகளில் ஆர்வம் கொண்ட லட்சுமி மஞ்சு தொண்டு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில த்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 167 பள்ளிகளை லட்சுமி மஞ்சு தத்தெடுத்துள்ளார்.
இதன் மூலம் 16 ஆயிரத்து 497 மாணவர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறும்போது, “புதுமையான கற்பித்தல் முறைகள் மூலம் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கோடு இதை செய்துள்ளோம். தத்தெடுத்த பள்ளிகளில் 50 மாணவர்களை கொண்ட ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும். தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்” என்றார்.
ஐதராபாத், ரங்காரெட்டி, யாதாத்ரி, ஸ்ரீகாகுளம் மற்றும் கட்வால் ஆகிய மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் வகுப்பறை முயற்சிகளை செயல்படுத்தி அதிக மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.
தெலுங்கானா அரசாங்கத்துடனான ’டீச் ஃபார் சேஞ்ச்’ ஒத்துழைப்பு என்பது தத்தெடுப்புத் திட்டம் மட்டும் அல்ல, அரசுப் பள்ளி ஆசியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.” என்றார்.
மேலும், இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் ’டீச் ஃபார் சேஞ்ச்’ போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய லக்ஷ்மி மஞ்சு, “அரசு பள்ளிகளில், குறிப்பாக தற்போது வருகை குறைவாக உள்ள கிராமப்புறங்களில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதிய கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அரசாங்கம் ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.