சிட்னி, ஆகஸ்ட்டு 6:
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ரஸ்ஸல் தீவு எனும் தீவு உள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவியதில் ஆடவர் ஒருவரும் அவரது ஐந்து மகன்களும் உயிரிழந்தனர்.
சிறுவர்களின் தாயார் மட்டும் உயிர் பிழைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
தனது மொத்தக் குடும்பத்தையும் பறிகொடுத்த அப்பெண் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது.
தீச்சம்பவத்தால் அவ்வீடு இடிந்து விழுந்ததாக குவீன்ஸ்லாந்து தீயணைப்பு, மீட்புப் பிரிவு கூறியது. அத்தோடு அருகில் உள்ள சில வீடுகளும் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 9 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அத்தோடு போலீஸ் விசாரணை தொடர்கிறது.




















