திருமண அழைப்பிதழில் பெயர் இல்லை; தாத்தாவைக் கொலை செய்த பேரன்!

திண்டுக்கல்:

திருமண அழைப்பிதழில் தன்னுடைய குடும்பத்தாரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதற்காக 78 வயது முதியவரை அவரின் பேரன் கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் திண்டுக்கல் அருகே நீலக்கோட்டை என்ற நகருக்கு அருகே கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரியாம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆச்சிமுத்து என்பவரை அவருடைய பேரன் மருதை, 25, என்பவர் கொலை செய்துவிட்டார் என்று காவல்துறை தெரிவித்தது.

மருதையின் தாய்மாமன் மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அந்தத் திருமண அழைப்பிதழில் தன்னுடைய குடும்பத்தாரின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதால் மருதை கடும் கோபத்தில் இருந்ததாக புலன்விசாரணை மூலம் தெரியவந்தது.

குடிபோதையில் புதன்கிழமை தன்னுடைய தாய்மாமன் வீட்டுக்குப் போன மருதை, அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதைப் பார்த்த ஆச்சிமுத்து நடுவே குறுக்கிட்டு மருதையை கண்டித்ததாகவும் தெரிகிறது.

அந்த ரகளையில் மருதை கதிர் அறுக்கும் அரிவாளால் ஒரே வெட்டாக ஆச்சிமுத்துவை வெட்டினார். அதே இடத்தில் ஆச்சிமுத்து பலியானார். மருதை தப்பி ஓடிவிட்டார்.

இதன்தொடர்பில் வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் மருதையை தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here