ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்தது. அதையடுத்து அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ஹைதராபாத்தின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. அதையடுத்து நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகாலை தொடங்கி சில மணி நேரங்களில் பரவலாக பல இடங்களில் சராசரியாக 12 செ.மீ மழை பெய்த நிலையில் ஹைதராபாத்துக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கனமழை காரணமாக ஹைதராபாத், ரெங்காரெட்டி, மேத்சல் போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதை சுட்டிக் காட்டியுள்ள மாநகர போக்குவரத்துக் காவல்துறை, பொதுமக்கள் பயணங்களை மிகவும் கவனமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 36 விழுக்காடு குறைவாகப் பதிவாகியிருக்கும் சூழலில், பருவ மழைக் காலம் முடிவுறும் நிலையில் தெலுங்கானாவில் பெய்துள்ள மழை ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.