நெகிரி செம்பிலானைச் சேர்ந்த வயதான பெண்மணி சுங்கை திமூன் கரையில் உப்பு நீர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 30 ஆண்டுகளாக இறால்களை சேகரிக்கும் அம்மூதாட்டி வேதனையான அனுபவத்தை பெற்றார். துயோங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் நூர் ஹெல்மி அப்துல் ஹலிம், சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் (HTJ) அந்த மூதாட்டியை பார்க்கச் சென்றதாகக் கூறினார்.
செவ்வாய்கிழமை (செப்டம்பர் 5) தொடர்பு கொண்டபோது, பெண் தனது படகில் இருந்து ஜெட்டிக்கு அருகில் ஏறிக் கொண்டிருந்தபோது, திடீரென முதலை அவளை ஆற்றுக்குள் இழுக்க முயன்றது. மூன்று தசாப்தங்களாக ஆற்றங்கரையில் பயணம் செய்து இறால்களைச் சேகரித்தது வந்ததாகவும் இது போல் முதலையால் ஒருபோதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று அந்தப் பெண் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.
மலாக்கா அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புக் குழுவின் துணைத் தலைவரான முகமட் நூர் ஹெல்மி, தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 4) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றார்.
மக்கிக் நூர்கைசர் என்று பிரபலமாக அறியப்படும் அந்த பெண், முதலையுடன் கடுமையாக போராடியதாகவும், இது தனக்கு ஒரு பயங்கரமான தருணம், அதிர்ஷ்டவசமாக அவளால் முதலையிடன் இருந்து தப்பிக்க முடிந்தது என்று அவர் கூறினார்.
முகமட் நூர் ஹெல்மி, நெகிரி செம்பிலான் மற்றும் இங்குள்ள எல்லைகளுக்கு இடையே பரந்து விரிந்து கிடக்கும் ஆற்றங்கரையில் இறால்களைத் தேடிய அனுபவத்தைப் பற்றிக் கேட்பதற்காக அந்தப் பெண்ணை இரண்டு முறை சந்தித்ததாகக் கூறினார். ஆற்றங்கரையில் ஒரு மனிதனை முதலை ஒன்று தாக்குவதை நாங்கள் கேள்விப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
சுங்கை திமூன் என்பது சுங்கை லிங்கியின் துணை நதியாகும். இது உப்பு நீர் முதலைகளின் வாழ்விடமாகும். மொத்தம் 164 முதலைகளின் நடமாட்டம் இருப்பதாக 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பதிவு செய்யப்பட்டன. மிகப்பெரியது 5 மீ நீளமும், சிறியது 1 மீ நீளமும் கொண்டவை. உப்பு நீர் முதலை ஒரு அச்சுறுத்தப்பட்ட வனவிலங்கு இனமாகும். மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2010 (சட்டம் 716) இன் கீழ் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது.