மாச்சாங்கில் உள்ள ஜாலான் ஊத்தான் குஃலின் என்ற இடத்தில் 38 வயதான பட்டறை உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) தனது வாகனத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையில் உதவ நான்கு பேரை கிளந்தான் போலீசார் கைது செய்துள்ளனர். 25 முதல் 36 வயதுக்குட்பட்ட நான்கு பேரும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.
போலீசார் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று அவர் புதன்கிழமை (செப்டம்பர் 20) கிளந்தான் போலீஸ் படைத் தலைமையகத்தில் (IPK) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். ஆயுதச் சட்டம் 1960 மற்றும் தண்டனைச் சட்டம் பிரிவு 302 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்காக அனைத்து சந்தேக நபர்களும் செப்டம்பர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். விசாரணையை எளிதாக்கும் வகையில், தெரிந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர், சாட்சிகள் என 25 நபர்களிடம் இருந்தும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக முகமட் ஜாக்கி கூறினார்.
பிரேத பரிசோதனையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் அருகில் இருந்து ஏழு முறை சுடப்பட்டார். அது அவரது மார்பு மற்றும் தலையை துளைத்தது. காவல்துறை தேடப்படும் பட்டியலில் இருந்த உயிரிழந்தவர் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட குழுவுடன் தொடர்புடையவர் என்றும், போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் கிரிமினல் மிரட்டல் உட்பட 21 குற்றப் பதிவுகளை கொண்டிருப்பதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.