வாஷிங்டன்:
இஸ்ரேலில் இருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் தென் லெபனானில் விழுந்ததில் ராய்ட்டர்ஸ் காணொளிச் செய்தியாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்; ஆறு செய்தியாளர்கள் காயமுற்றனர்.
அல் ஜஸீரா, ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த அவர்கள், இஸ்ரேலிய எல்லை அருகே உள்ள அல்மா அல்-ஷாப் பகுதியில் பணியாற்றிக்கொண்டு இருந்தனர். இஸ்ரேலிய ராணுவமும் லெபனானின் ஹிஸ்புல்லா படையும் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
லெபனான் பிரதமர் நஜிப் மிக்காத்தியும் ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இச்சம்பவத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் என்றனர்.
நேரடிக் காணொளிப் பதிவு ஒன்றை ஒளிபரப்பாளர்களுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தபோது இசாம் அப்தல்லா கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“எமது காணொளிப் படைப்பாளர் இசாம் அப்தல்லா இறந்துவிட்டது எங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்று ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரு ராய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வசிப்பிடம் திரும்பியுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
தன் செய்தியாளர்கள் இருவர் காயமுற்றதாக ஏஎஃப்பி நிறுவனம் தெரிவித்தது.
இச்சம்பவத்தில் தன் செய்தியாளர்கள் இருவர் காயமடைந்ததாக தெரிவித்த அல் ஜஸீரா நிறுவனம், இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குறைகூறியது. ‘இந்தக் குற்றச்செயலுக்கு’ பின்னால் இருப்பவர்கள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அது சொன்னது.