10 கிலோ கஞ்சாவுடன் பள்ளி மாணவர் உட்பட இருவர் கைது!

பாசீர் மாஸ்:

10 கிலோ கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 16 வயது பள்ளி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ரந்தாவ் பாஞ்சாங் அருகேயுள்ள கம்போங் பாங்கோல் பெட்டாலிங் சாலையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறைத் துணை தலைவர், கண்காணிப்பாளர் நிக் அமினுடின் ராஜா அப்துல்லா தெரிவித்தார்.

“பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் சந்தேகத்திற்குரிய ஒரு பெரோடுவா கான்சில் கரை காவல்துறை அதிகாரிகள் சோதனைக்காக நிறுத்தினர்.

“வாகனத்தை சோதனை செய்ததில், காரினுள் RM31,000 மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 18 மற்றும் 16 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டனர் ,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருவரில் ஒருவர் இன்னும் ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள பள்ளியில் படித்து வருவதாக அமினுடின் கூறினார்.

“அவர்களில் ஒருவருக்கு முந்தைய போதைப்பொருள் பதிவு இருந்தது என்றும், அவர்களிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில் குறித்த இருவரும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு சாதகமாக பதிலை பதிவு செய்தனர் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக இரு சந்தேகநபர்களும் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here