ஆயர் சிலாங்கூர் இடையிலான பரஸ்பர நல்லிணக்கம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் திருநாளின்போது அதன் அதிகாரிகள் மக்கள் ஓசைக்கு வருகை தந்து பல்வேறு இனிப்புப் பதார்த்தங்கள் வழங்கி மக்கள் ஓசை நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர் பகுதிக்கும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக ளைத் தெரிவித்துக் கொள்வர்.
அவ்வகையில் நேற்று மக்கள் ஓசை தலைமையகத்திற்கு வருகை புரிந்த ஆயர் சிலாங்கூர் பொது உறவுகள் பிரிவுத் தலைவர் இஸாட் இஸ்மாயில் அப்துல்லா, கார்ப்பரெட் தொடர்புப் பிரிவுத் தலைவர் எலினா பஸ்ரி, கார்ப்பரெட் தொடர்பு பிராண்ட் மேலாண்மைப் பிரிவுத் தலைவர் முகமட் அஷ்ராஃப், சீஹாய்பி லீஸா ஆகியோர் மக்கள் ஓசை இயக்குநர் டத்தோ கோபி, ஆசிரியர் பி.ஆர். ராஜன் ஆகியோருக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து இனிப்புப் பதார்த்தங்களை வழங்கினர்.
இவ்வாண்டு தீபாவளி நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஒரு புதிய மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு மக்கள் ஓசை வழங்கி வரும் நல்லாதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நட்பு தொடர வேண்டும் என்று அவர்கள் தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டனர்.
முன்னதாக பி.ஆர். ராஜன் மக்கள் ஓசையின் மக்கள் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து டத்தோ கோபி ஆயர் சிலாங்கூர் உயர் அதிகாரிகளுக்கு நல்வரவு கூறி இந்த ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இஸாட் இஸ்மாயில், எலினா பஸ்ரி, முகமட் அஷ்ராஃப் ஆகியோர் இனிப்புப் பதார்த்தங்களை வழங்கி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.