சிம்லா: இந்தியாவுக்குச் சுற்றுலாவுக்கு வந்த ரஷ்யத் தம்பதியின் உடல் நிர்வாணமான நிலையில் உடலில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். அதிலும் இமாச்சல பிரதேசம் போன்ற இமயமலைக்கு அருகே உள்ள மாநிலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. அப்படி ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் உடல் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நிர்வாண உடல்கள்: இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள புனித நகரமான மணிகரன் அருகே உள்ள சிறிய குளத்தில் இரு உடல்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த நிலையில், அங்கே தம்பதியினரின் நிர்வாண உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.
மேலும், அவர்கள் உடல்களில் சில காயங்களும் இருந்துள்ளன. சாலையில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தற்கொலையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த நிலப்பரப்பில் சாலையில் இருந்து இந்த குளத்திற்கு எளிதாக யாரையும் வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருக்க முடியாது என்ற போலீசார், இந்த இடத்தில் யாரையும் இழுத்து வந்ததற்கான அறிகுறிகளும் இல்லை என்று தெரிவித்தனர்.
போதைப்பொருள்: இதில் அந்த ஆணின் கை மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்களும் இருந்தன. அதேபோல அந்த பெண்ணின் கையில் காயங்களும் இருந்தன. இருப்பினும், இவை மைனர் காயங்கள்தான். அந்த காயங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை. உயிரிழப்பிற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு உடலை அனுப்பியுள்ளனர். அந்த இடத்தில் ஒரு பிளேடு, ஒரு மொபைல், மெழுகுவர்த்திகள், போதைப்பொருள் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் தங்கியிருந்த ரூமை சோதனை செய்த போது அங்கே காலி சிகரெட்டுகள், புகையிலைகள் மற்றும் பாஸ்போர்ட், மொபைல் ஆகியவை இருந்துள்ளன. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய குறிப்பில், எங்கள் உடைமைகளை ரஷ்யத் தூதரகத்திற்கும் எங்கள் மொபைலை குடும்ப உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள் என்று இருந்தன.