ரியாத்:
சவூதி அரேபியாவின் அல் நசர் குழு சார்பில் தமது முதல் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளார் உலகின் முன்னணிக் காற்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கடந்த ஆண்டு சாதனைத் தொகைக்கு அக்குழுவில் சேர்ந்தார் 38 வயதான ரொனால்டோ. அவரது வழியில் இப்போது முன்னணி ஆட்டக்காரர்கள் பலரும் அரபுக் குழுக்களில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், சவூதியின் டாயிஃப் நகரில் சனிக்கிழமை நடந்த வெற்றியாளர் கிண்ண (சாம்பியன்ஸ் கப்) இறுதி ஆட்டத்தில் ரொனால்டோவின் அல் நசர் குழு 2-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் குழுவை வென்று வாகை சூடியது.
கூடுதல் நேரம்வரை சென்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் சார்பில் விழுந்த இரு கோல்களையும் ரொனால்டோதான் அடித்தார்.
இந்தத் தொடரில் மொத்தம் ஆறு கோல்களைப் போட்டு, அதிக கோலடித்தோர் பட்டியலிலும் இவரே முதலிடம் பிடித்தார்.
சவூதி, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈராக், மொரோக்கோ, துனிசியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளின் முன்னணிக் குழுக்கள் இப்போட்டியில் பங்கெடுத்து வருகின்றன.