திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது வழக்கு; மன்சூர் அலிகான் அதிரடி அறிவிப்பு!

திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா, குஷ்பி, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். மன்சூர் அலிகான் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகை திரிஷா இனி மன்சூர் அலிகான் நடிக்கும் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். திரிஷாவிற்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர், மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் இருப்பினும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நேற்று மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இதை ஏற்று, மன்னிப்பது மனித மாண்பு எனக் கூறி திரிஷாவும் பதில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் மன்சூர் அலிகானை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர் உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

தான் பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டுள்ள அவர், அரசியல் குறித்தும், சினிமா குறித்தும் மட்டுமே தான் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியதாகவும், ஆனால் திரிஷா குறித்து மட்டும் பேசிய வீடியோவை எடிட் செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில விஷமிகள் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய நபர்கள் மீது மான நஷ்ட வழக்கு மற்றும் பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here