கோலாலம்பூர்:
பகாங்கின் கோலாலிப்பிஸ், கம்போங் பெரெம்பாங்கில் உள்ள மெயின் ரிங் ரோடு (CSR) திட்டத்தின் கட்டுமானப் பகுதியில், இந்தோனேசிய தொழிலாளி ஒருவரின் சடலம் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, விரிவான அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமானத் திட்டம் சம்பந்தப்பட்ட இடத்தில் அனைத்து விஷயங்களும், குறிப்பாக நிலையான இயக்க நடைமுறைகள் (SOP ) மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட்டதா என்பதை அறியவும் இந்த விசாரணை அவசியம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
“சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண பல தரப்பினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்றும் அவர் தனது பேஸ்புக்கில் நேற்று பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தையும் இரங்கலையும் அவர் தெரிவித்தார்.
நேற்றுக் காலை 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், கைருல் அனாம் (28) என்பவர் புதிதாக தோண்டப்பட்ட வடிகாலின் ஆழத்தை அளவிடும் போது, மண்சரிவில் புதைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் கிழக்கு ஜாவாவைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஐந்து மாதங்களாக CSR பாதையை அமைப்பதற்காக துணை ஒப்பந்ததாரர் நிறுவனத்துடன் மட்டுமே பணியாற்றி வந்தார் எனவும் கூறப்படுகிறது.