புத்ராஜெய – பல தலை முறைகளாக விவசாயத் துறையில் ஈடுபட்டு வரும் பேராக், உலு கிந்தா மாவட்டத்தின் காய்கறி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பேராக் மாநில விவசாய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக காய்கறிகள் பயிரிடப்படும் மிகப்பெரிய பகுதியாக விளங்கும் உலுகிந்தாவில் காய்கறிகளை விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளதாக பிஎஸ்எம் கட்சியின் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
உலு கிந்தா காய்கறி விவசாயிகளின் பிரதிநிதியான சோங் காம் மெங், மற்றும் அவர்தம் குழுவினரும், டாக்டர் ஜெயகுமாரும் ஒன்றிணைந்து, நேற்று காலை புத்ராஜெயவில் உள்ள விவசாயம் – உணவு உத்தரவாதத்துறை அமைச்சிடம் இந்த விவகாரம் தொடர்பில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர்.
அமைச்சர் டாதோஸ்ரீ முகமட் சாபு சார்பில் அவரின் சிறப்பு அதிகாரி முகமட் பைஸால் அப்துல் ரஹ்மான் மகஜரை பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜெயக்குமார், நீண்ட காலமாக தீர்வில்லாமல் இருக்கும் இந்த நிலப் பிரச்சனைக்கு விவசாயம் – உணவு உத்தரவாதத்துறை அமைச்சு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
விவசையிகளின் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அது மட்டுமின்றி பேராக் மாநில அரசாங்கமும் நிலம் ஒதிக்கீடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
எங்கள் மகஜர் தொடர்பில் அமைச்சு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே உணவுக்கான தேவையை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய நிலப் பகுதியாக உலு கிந்தா விளங்குகிறது எனவே விவசாயிகளின் நிலை உணர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மாநில, மத்திய அரசாங்கம் முனைப்பு கட்ட வேண்டும் என்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசையிகள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.
எம் . அன்பா