இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரபல தாதா தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. மும்பையில் கடந்த 1993 நடந்த மோசமான குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 750 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோசமான சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டவர் நிக உலக தாதா தாவூத் இப்ராஹிம். இந்த தாவூத் இப்ராஹிமை இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவும் கூட சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிம் தலைக்கு ரூ.25 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவூத் இப்ராஹிமிற்கு அடையாளம் தெரியாத நபர் விஷம் வைத்ததாகவும் இதனால் அவரது உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து அந்நாட்டு அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற போதிலும் அங்கே எக்ஸ் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இது குறித்த செய்திகளே வேகமாகப் பரவி வருகிறது.
இணையச் சேவை: இதுபோன்ற செய்திகள் வேகமாகப் பரவுவதால் அங்கே ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே நாடு முழுக்க இணையச் சேவையும் கூட முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தாவூத்தின் உடல்நிலை எந்தளவுக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் பரவாமல் இருக்கவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உயிரிழப்பு? இதற்கிடையே தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துவிட்டதாகவும் அங்கே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக இணையத்தில் தீயாகத் தகவல் பரவ தொடங்கியுள்ளது. அதற்கேற்றார் போல பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்சூ காஸ்மி மர்மமான சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
அதாவது பாகிஸ்தானில் ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளதாகவும் அதை மறைக்கவே ட்விட்டர், கூகுள் மற்றும் யூடியூப் பக்கங்கள் முடக்கப்படுவதாகக் கூறி பகீர் கிளப்பியுள்ளார். இப்படி இணையத்தில் பல கருத்துகள் பரவுவதால் உண்மையில் அங்கே என்ன நிலைமை என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. பல பகுதிகளில் இணைய வேகம் பயங்கரமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் அது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
மவுனம்: பலரும் இது குறித்து அதிருப்தி தெரிவித்தாலும் கூட பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த விவகாரத்தில் மவுனம் காத்தே வருகிறது. இணையச் சேவை முடங்குவதற்கு முன்பு வரை தாவூத் இப்ராஹிமின் மரணம் குறித்த தகவல்கள் தான் இப்போது பாகிஸ்தான் இணையத்தை ஆக்கிரமித்து இருந்தது. அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
என்ன விவகாரம்: அவர் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக பல காலமாகவே செய்திகள் வெளியாகி வருகிறது. இருப்பினும், அதைப் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் தான் அவரது மரணம் குறித்த தகவல்கள் பாகிஸ்தானில் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.