குவாந்தான்:
பெக்கானில் உள்ள கம்போங் சுங்கை மியாங் அருகே நேற்றிரவு டிரெய்லர் மீது கார் மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இரவு 8.22 மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே பெக்கான் மற்றும் நெனாசி நிலையங்களில் இருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பபட்டதாகவும் பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த சம்பவத்தில் பெரோடுவா கான்சில் ரக கார், ஒரு டிரெய்லருடன் மோதியதில் பாதியாக உடைந்து தீப்பிடித்தது.
“இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட ஆண், காரில் இருந்து வெளியேறியபோதும் படுகாயமடைந்ததன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநிலையில் பாதிக்கப்பட்ட பெண், காருக்குள் சிக்குண்டு எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் ,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதில் டிரெய்லர் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார் என்று அவர் மேலும் கூறினார்.