கோலாலம்பூர், டிங். 28-
மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்திற்கு 2023ஆம் ஆண்டு சாதனை ஆண்டாக அமைந்ததாக மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் சிவசம்பு தெரிவித்தார்.
இவ்வாண்டு நவம்பர் 7 முதல் 12ஆம் நாள் வரை 22ஆவது ஆசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளார் சிட்டியில் நடைபெற்றது.
30 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து போட்டியிட்டனர்.
மலேசியாவைப் பிரதிநிதித்து 104 போட்டியாளர்களும் 7 அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில் தேசியக் குழு 29 தங்கம், 41 வெள்ளி மொத்தம் 99 பத்தங்கள் பெற்று ஆசிய நிலையில் 4ஆவது இடத்தைப் பிடித்தனர்.
நவம்பர் 10ஆம் நாள் ஆசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயச் சங்கத்தின் பேராளர் மாநாடும் பொதுக் கூட்டமும் கிளார்க் சிட்டி ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெற்றது.
ஆசிய செயலாளர் பதவியை சிவப்பிரகாசம் மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொண்டதுடன் உலக கவுன்சில் உறுப்பினராகவும் தேர்வு பெற்றார்.
ஆசிய மகளிர் குழுவின் தலைவியாக செல்வி கலைவல்லி மூன்றாவது தவணைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதே பொதுக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ டாக்டர் வி. புலேந்திரன் கௌரவத் தலைவராகவும் முரளி சுப்பிரமணியம் உட்கணக்காய்வாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
34ஆவது மலேசிய மாஸ்டர் ஓட்டப்பந்தயப் போட்டிகள் செப்டம்பர் 16, 17ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
15 நாடுகளில் இருந்து 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து போட்டியிட்டனர்.
இந்தியாவைப் பிரதிநித்து 106 வயது மாது 4 ஓட்டங்களில் கலந்து சாதனை படைத்தார். ஆண்கள் பிரிவில் ஈப்போவைச் சேர்ந்த எஸ். புஷ்பநாதன் (வயது 94) 20 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்து போட்டியிட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.
மே 20ஆம் நாள் ஒலிம்பிக் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாக, தொழில்நுட்ப கருத்தரங்கில் மலேசிய மாநிலங்களில் இருந்து 80க்கும் மேற்பட்டோர் கலந்து பயன் பெற்றனர்.
டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற்ற விளையாட்டு விழாவும் பயிலரங்கு கருத்தரங்கில் மலேசியாவில் உள்ள மாநில மாஸ்டர் சங்கங்களைப் பிரதிநிதித்து 75க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்து பயன்பெற்றனர்.
2023ஆம் ஆண்டு சங்கம் சிறப்பாக செயல்பட்டதற்கு முழு காரணமாக இருந்த புரவலர், ஆலோசகர், நிர்வாகத்திற்கு சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.