சிரம்பான், டிச. 29-
தனது 10 வயதில் சிலம்ப தற்காப்புக் கலையை பயிற்சியாகத் தொடங்கி இன்று தனது 72 வயதிலும் மகா குருவாக அக்கலையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் மகா குரு காசிராஜாவுக்கு, பிரிட்டிஷ் சொடோக்கான் கராத்தே அகாடமி இரட்டை உயரிய தற்காப்பு விருதுகளை வழங்கி சிறப்பித்தது.
அண்மையில் லண்டனில் அந்த அமைப்பின் தலைமை மகா குருவும் கராத்தே தற்காப்புக் கலையின் 8 டன் உலக சாம்பியன் யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த செல்லதுரை கணேஷ்லிங்கம் தலைமையில் காசிராஜாவுக்கு ’சிலம்ப உலக நாயகன்’, ’கிரேட் கிராண்ட் மாஸ்டர் 10 டன் சிலம்பம்’ எனும் இரு வெவ்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதற்கான சிறப்பு விருது வழங்கும் விழா இங்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில், மலேசிய சிலம்ப வீரர்கள், பிரமுகர்கள் பலரின் முன்னிலையில் நடைபெறுகிறது.
முன்னதாக மகா குரு காசிராஜா என்ற சி.ராமலிங்கத்தை வாழ்த்தி பேசிய உலக தற்காப்பு வீரர் செல்லதுரை, அண்மையில் லண்டனில் நடைபெற்ற அனைத்துலக தமிழர் கராத்தே போட்டியில் சிறப்பு தற்காப்பு விளையாட்டாளர்களான அவரது புதல்வர் சிலம்ப மகா குரு ஜெகனுடன் கலந்துகொண்டு தனது 72ஆவது வயதிலும் பாயும் புலியாகவும் சீறும் சிறுத்தையாகவும் அவரின் சுறுசுறுப்பும் வேகமும் தம்மையும் அங்கிருந்த உலக பங்கேற்பாளர்களை ஆச்ங்ரியத்தில் ஆழ்த்தியதோடு அங்கு அனைவரின் பாராட்டையும் கைத்தட்டலையும் அவர் பெற்றார்.
உலக தற்காப்பு துறையில் மிகவும் அனுபவமும், தொடர் சாதனைகளையும் இந்த முதிர்ந்த வயதிலும் படைத்து வரும் அவருக்கு உலக அங்கீகாரம் வழங்கும் உயரிய நோக்கத்தில், அவருக்கு ’சிலம்ப உலக நாயகன்’ பெயர் பதிக்கப்பட்ட பெரிய தங்க கோப்பையுடன் தங்க நிறம் கொண்ட சிலம்ப சீருடை, தங்கப்பட்டை ஆகியவை வழங்கி சிறப்பித்தோம். மேலும் 600 பவுன் இங்கிலாந்து பணத்தொகையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என குறிப்பிட்டார்.








