கோத்தா பாரு:
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,385 பேராக குறைந்துள்ளது.
4,684 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும், பாசீர் மாஸ், தும்பாட், ஜெலி மற்றும் கோலக் கிராய் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 42 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நான்கு மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாசீர் மாஸில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 23 நிவாரண மையங்களில் மொத்தம் 10,283 பேர் தங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தும்பாட்டில் 10 நிவாரண மையங்களில் 3,311 பேரும் , ஜெலியில் ஐந்து நிவாரண மையங்களில் 701 பேரும், கோலக் கிராயில் நான்கு நிவாரண மையங்களில் 90 பேரும் தங்கியுள்ளனர் என்று சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் போர்ட்டல் தெரிவித்துள்ளது.
மேலும் கிளந்தான் மாநிலத்தில் இரண்டு ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன, ஆறு ஆறுகள் எச்சரிக்கை அளவை விட அதிகமாக உள்ளன, மேலும் ஐந்து ஆறுகள் அபாய அளவை எட்டியுள்ளன என்று https://publicinfobanjir.water.gov.my இணையதளம் தெரிவித்துள்ளது.