தாப்பா ஜாலான் பகாங்கில் உள்ள பத்து 23 இல் நேற்றிரவு ஒருவர் எரிந்த காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் துணை இயக்குநர் (செயல்பாடுகள்), சபரோட்ஸி நோர் அஹ்மத் கூறுகையில், நேற்று இரவு 10.04 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.
அழைப்பைத் தொடர்ந்து, தாப்பா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. தீ விபத்தில் கார் 50% எரிந்து நாசமானது என்று கூறினார்.
காரின் பின் இருக்கையில் எரிந்த நிலையில் காணப்பட்ட 50 வயதான ஒராங் அஸ்லி என்று நம்பப்படும் ஒரு ஆடவர் பலியானார் என்று அவர் கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பொதுமக்கள் தீயை அணைத்ததாக சபரோட்ஸி கூறினார்.
பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை அகற்ற காவல்துறையினருக்கு உதவினர். பின்னர் அவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.








