பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடவருக்கு ஆறு மாதங்கள் சிறை

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் லோரி ஓட்டுநர் ஒருவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஃபைஸல் முகமட் என்ற அந்த ஆடவர், கடந்த ஆண்டு டிக்டாக் சமூக ஊடகம் வழியாகப் பிரதமர் அன்வாருக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.

‘பிஎம்X’ஐயும் மற்ற அமைச்சர்களையும் சுட முன்வருவோருக்கு ஐந்து மில்லியன் ரிங்கிட் தருவதாகக் கூறி, ஃபைஸல் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார்.

அன்வார் மலேசியாவின் பத்தாவது பிரதமர் என்பதால் அவர் ‘பிஎம்X’ எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறார்.

காணொளியைத் தொடர்ந்து, ஃபைஸல்மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் அக்காணொளி அகற்றப்பட்டதாக ‘ஃபிரீ மலேசியா டுடே’ செய்தி கூறியது.

நீதிமன்ற விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஃபைஸல்.

ஆயினும், தன் குடும்பத்தையும் உடல்நலமில்லாத தாயாரையும் தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால், தன்மீது கருணை காட்டுமாறும் தண்டனையாக அபராதம் விதிக்குமாறும் அவர் மன்றாடினார்.

அதே நேரத்தில், அவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here