வெளிநாடுகளில் நடத்தப்படும் போட்டிகளில் களமிறங்கும் கால்பந்து அணிகள் மேலும் ஓர் இறக்குமதி ஆட்டக்காரரை இணைத்துக் கொள்ளலாம் எனும் முடிவை சிலாங்கூர் அணி வரவேற்றுள்ளது.
இந்த முடிவானது எங்கள் அணிக்கும் பேருதவியாக இருக்கும். 2024 / 2025 தவணைக்கான ஆசிய சாம்பியன் லீக் போட்டியில் களமிறங்குவதில் எங்கள் அணியைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இது உதவும் என்று சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தார் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ ஷாரில் மொக்தார் திடலில் ஆறு இறக்குமதி ஆட்டக்காரர்கள் களம் இறங்கலாம் என்ற கோட்டா எண்ணிக்கை இத்தவணைப் போட்டியை மேலும் வலுப்படுத்தும்.
இது மலேசிய லீக் போட்டிக்கு ஆக்கப்பூர்வமான முன்னேற்றம். ஆனாலும் சம்பந்தப்பட்ட அணிகள் இத்தவணையில் 10 இறக்குமதி ஆட்டக்காரர்களை இணைக்க விரும்பினால் அதற்கு ஏற்ற வரவு செலவை எப்படி நிர்வகிக்கும் என்பதுதான் தமது கேள்வி எனவும் அவர் குறிப்பிட்டார்.
என்னைப் பொறுத்தவரையில் இதற்கு முன் 9 இறக்குமதி ஆட்டக்காரர்கள் இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 10 பேராக உயர்த்தப்படுகிறது.
எனவே இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. இந்த ஒரு கூடுதல் ஆட்டக்காரரை ஆக்கப்பூர்வமாக அணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.









