புத்ராஜெயா:
செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை, வரும் மார்ச் 1 முதல் அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது.
இன்று அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த முடிவில், நீதிமன்றத்திற்கு செல்லாது வழக்குத் தொடரப்படாமல் வீடு திரும்புவதற்கான திட்டத்துடன், அவர்கள் தன்னார்வமாகவே நாடு திரும்புவதற்கான முயற்சியையும் உள்ளடக்கியிருக்கும் என்று, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.
மேலும் அவர்கள் பிறந்த நாட்டிற்குத் திரும்புவதற்கு முன், முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவுக்குள் நுழைவது, விதிமுறைகளை மீறுவது மற்றும் அதிக காலம் தங்கியிருப்பது உள்ளிட்ட குடியேற்றக் குற்றங்களுக்கு அவர்களுக்காக அபராதம் விதிக்கப்படும், அதன் பின்னர் அவர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு அவர்களுக்கு நீதிமன்ற வழக்கிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.
ஒவ்வொரு குடியேற்ற குற்றத்திற்கும் RM300 முதல் RM500 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, அரசாங்கம் தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் (WRP) 2.0 ஐ செயல்படுத்தியது, இது டிசம்பர் 31 அன்று முடிவடைந்தது, அத்தோடு தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்ய ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க முதலாளிகளுக்கு வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.