கோத்தா கினாபாலு:
ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் சபா உறுதியாக உள்ளது.
வெளிநாட்டினரை டிஜிட்டல் முறையில் பதிவு செய்தாலும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குடிநுழைவுத் துறை மற்றும் பிற அமலாக்க அமைப்புகளுக்கு குழு தெளிவான செய்திகளை அனுப்பியுள்ளதாக மாநில துணை முதல்வர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெஃப்ரி கிட்டிங்கன் கூறினார்.
சமீபத்தில், சபா குடிநுழைவுத் துறை பிலிப்பைன்ஸின் பகுங்கான் தீவில் இருந்து சண்டக்கானுக்கு குடிபெயர்ந்தவர்களை கடத்தும் ஒரு கும்பலை முடக்கியது. குறித்த கும்பல் ஒரு நபருக்கு RM1,500 முதல் RM2,500 வரை சேவைக் கட்டணமாக வசூலித்தது.
“டிஜிட்டல் பதிவு என்பது அடிப்படையானது, இது எதிர்காலத்தில் வெளிநாட்டினரை நிர்வகிப்பது எளிதாக இருக்கும், ஆனால் நாட்டில் தங்குவதற்கான சரியான ஆவணங்கள் இல்லாத எவரும் அவரின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.
மாநில விவசாயம், மீன்வளம் மற்றும் உணவுத் தொழில் அமைச்சராகவும் இருக்கும் ஜெஃப்ரி, தஞ்சோங் லிபட்டில் KPDயின் சீனப் புத்தாண்டு சந்தையைத் தொடங்கிவைத்த பிறகு இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டினர் மீதான மக்கள் தொகை கணக்கெடுப்பை முடித்த பிறகு, சபா மக்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஜெஃப்ரி பரிந்துரைத்தார்.
“இந்தப் பயிற்சி பாதுகாப்புக்காகவே உள்ளது என்று கூறிய அவர், சபா அரசாங்கத்திற்கு இது முதல் முறை. அதனால்தான், புலம்பெயர்ந்தோரை சடடவிரோதமாக நாட்டில் தங்க ஊக்கப்படுத்த வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம் ” என்று அவர் மேலும் கூறினார்.