கடல்வழி பாதுகாப்பை அதிகரிக்கும் இந்தியா; மினிகாய், அகாட்டி தீவுகளில் புதிய கடற்படை தளங்கள்

மாலத்தீவு மற்றும் சீனா ஆகிய அண்டை தேசங்களுக்கு செக் வைக்கும் வகையில் மினிகாய், அகாட்டி தீவுகளில் புதிய கடற்படை தளங்களை இந்தியா அமைக்கிறது.

மாலத்தீவு தனது புதிய ஆட்சியாளர்களால் நீண்ட கால தோழமை நாடான இந்தியாவைப் புறக்கணித்ததோடு, எல்லைகளில் இந்தியாவை சதா சீண்டும் சீனாவுடன் தோள் சேர்ந்திருக்கிறது. மாலத்தீவில் இருக்கும் இந்திய துருப்புகளை வெளியேறுமாறும் காலக்கெடு விதித்திருக்கிறது. சீனாவின் உளவுக் கப்பலுக்கும் மாலத்தீவு வரவேற்பு தெரிவித்திருக்கிறது.

இப்படி கடல் எல்லையில் அதிகரிக்கும் உரசல் மற்றும் உளவு முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், மினிகாய் மற்றும் அகாட்டி தீவுகளில் புதிய கடற்படை தளங்களை இந்தியா நிர்மாணிக்கிறது. ஏற்கனவே மாலத்தீவு சுற்றுலாத் தலத்துக்கு மாற்றாக லட்சத்தீவுகளை முன்னிறுத்தி பிரதமர் மோடியின் மூலம் பதிலடி தந்த இந்தியா தற்போது புதிய கடற்படை தளங்களை நிர்மாணித்து தனது கடல் எல்லை பாதுகாப்பை அதிகரிக்கிறது.

மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தினங்களில் மினிகாய் கடற்படை தளத்தை திறப்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட போர்க்கப்பல்கள் புடைசூழ அங்கே பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்திற்குப் பிறகு, இந்தியாவின் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

மாலத்தீவிலிருந்து 524 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லட்சத்தீவுகளில் இந்தியா தனது புழக்கத்தை அதிகரிப்பதன் வாயிலாக, தென்கிழக்கு ஆசியா மற்றும் வட ஆசியாவிற்கான பில்லியன் டாலர் மதிப்புள்ள வணிக வர்த்தகத்தையும் இந்தியா ஊக்குவிக்க முடியும்.

மினிகாய் தீவில் புதிய விமான ஓடுதளத்தை உருவாக்கவும், அகாட்டி தீவில் ஏற்கனவே உள்ள விமான தளத்தை மேம்படுத்தவும், ஐஎன்எஸ் ஜடாயுவை நிலைநிறுத்தவும் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. இது பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பிற்கு ஆதரவாகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் இந்தியாவின் அதிகாரத்தை முன்னிறுத்தவும் சிறப்பான உத்தியாக முன்னெடுக்கப்படுகிறது.

ஏற்கனவே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இந்தியா தனது படைத் திறனை வளர்த்து வரும் நிலையில், லட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவுகளை மேம்படுத்தும் நடவடிக்கை, வணிகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பு மேம்படுத்தல் மற்றும் தீவுப் பகுதிகளில் சுற்றுலாவை வளர்க்கவும் உதவும்.

லட்சத்தீவு, மினிகாய் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் புவியியல் இருப்பிடம், இந்தியப் பெருங்கடலில் வேகமாக விரிவடையும் சீன கடற்படையின் சவால்களை இந்தியா முறையாக எதிர்கொள்ள உதவும். அதே வேளையில், தனக்கான கடல்சார் வர்த்தக வழிகளையும் இந்தியா பாதுகாக்க முடியும். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் அங்கே முகாமிடுவது இந்தியாவின் பாதுகாப்பு தோற்றத்தை அடுத்த கட்டத்துக்கு பிரம்மாண்டமாக எடுத்துச் செல்லவிருக்கிறது. இந்தியா தற்போது தனது எதிரிகள் மட்டுமன்றி துரோகிகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here