மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது மனைவி பதிவிட்டுள்ள போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ரஷ்யாவில் அதிபராக இருக்கும் புதினுக்கு எதிராக யாராவது எதாவது கருத்துகளைக் கூறினால்… அவர்கள் சத்தமே இல்லாமல் காலி செய்யப்படுவார்கள். இதற்கு முன்பும் பலர் இதுபோல காலி செய்யப்பட்டுள்ளனர். இப்போது அலெக்ஸி நவல்னிக்கு அதேதான் நடந்துள்ளது.
அங்குள்ள மிகக் கடுமையான சட்டங்களைத் தாண்டி புதினின் சொகுசு வாழ்க்கை, செல்வம் குறித்து ஆதாரத்துடன் வீடியோக்களை வெளியிட்டவர் அலெக்ஸி நவல்னி.. ரஷ்யாவில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்தே வந்தது.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவருக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அவர் சிறையில் இருந்து வெளியே வந்து நாட்டிற்குத் தலைமை தாங்குவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பினர். அவர்களின் நம்பிக்கைகளுக்குப் பேரிடியாகக் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு செய்தி வந்தது. அதாவது நவல்னி சிறையிலேயே உயிரிழந்தார். வாக்கிங் சென்று வந்த நவல்னி மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
மனைவி: இதற்கிடையே நவல்னி மரணத்தை அவரது டீம் உறுதி செய்துள்ளது. நவல்னி உடல் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அதைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், மரணம் தொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் விசாரணை முடிந்த பிறகே உடல் ஒப்படைக்கப்படும் என்றும் ரஷ்ய சிறை துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா தனது கணவர் மரணத்திற்குப் பிறகு முதல்முறையாக சமூக வலைத்தளத்தில் கருத்து கூறியிருக்கிறார். அலெக்ஸி நவல்னி உடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “ஐ லவ் யு” என்று மட்டும் பதிவிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. பலரும் நவல்னி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பதில் சொல்லியே தீர வேண்டும்: முன்னதாக நவல்னி மரணம் தொடர்பான தகவல்கள் பரவிய சமயத்தில் பேசிய யூலியா, “இந்த நேரத்தில் நான் எனது குழந்தைகளுடன் இருக்க வேண்டுமா இல்லை.. இங்கே வர வேண்டுமா என்பதில் குழப்பம் இருந்தது. ஆனால், நவல்னி இருந்தால் என்ன செய்வாரோ அதைச் செய்ய முடிவு செய்தேன். எனது கணவர் உயிரிழந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை.
ஒருவேளை அவர் உயிரிழந்து இருந்தால் அதற்குக் காரணமாக இருக்கும் புதின் அவரது நண்பர்கள், அவரது அரசு என அனைவரும் இந்த நாட்டிற்கும் எனது குடும்பத்திற்கும் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
ரஷ்யா விளக்கம்: நவல்னி மரணத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் தான் காரணம் என்று பல்வேறு மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை என்று ரஷ்யா மறுத்துள்ளது. மேலும், நவல்னி திடீர் மாரடைப்பை ஏற்படுத்தும் Sudden Death Syndrome காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.





















