தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சென்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருமண முன் வைபவ நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது.
ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3,000 ஏக்கரில் ‘வந்தாரா’ என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி உள்ளது. இங்குதான் ஆனந்த் அம்பானி திருமண முன்வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று நாட்கள் நிகழ்ச்சியில், இசைக்கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாலிவுட் நடிகர் நடிகைகள், கோலிவுட் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான் உள்பட ஏராளமான விளையாட்டு பிரபலங்கள், மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில், விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் பலர் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி கபூருடன் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.