பாஜகவுடன் கூட்டணி-சரத்குமார் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடப் போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் தலைமையில் இயங்கும் சமத்துவ மக்கள் கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக களமிறங்குகின்றன. அதனால் கடந்த தேர்தலின்போது தங்களுடன் இருந்த கட்சிகளை மீண்டும் தங்கள் கூட்டணிக்கு கொண்டுசெல்ல இரண்டு கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

பாமக,தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை அதிமுக தங்கள் கூட்டணிக்கு கொண்டு சென்று விட்டதாகக் கூறப்படும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதிமுக தரப்பில் சமகவுக்கு தொகுதிகள் ஒதுக்க உறுதியளிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. எனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற நிலையில் சரத்குமார் திடீரென பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜகவின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28-ம் தேதி என்னை நேரில் சந்தித்து, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைப்பது குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று  மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக தமிழக பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு மக்களவைத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்தது.

அதன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன்”  என்று தெரிவித்துள்ளார்.

பல கட்சிகளை கூட்டணியில் இழந்துள்ள பாஜக, இப்போது சமத்துவ மக்கள் கட்சியை தங்கள் பக்கம் சேர்த்து ஆறுதலடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here