கோலாலம்பூர்:
மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் இயங்கிவந்த கடைசி அதிர்ஷ்ட குலுக்கல் கடை மார்ச் 6ஆம் தேதியுடன் மூடப்பட்டது.
இதன் மூலம் மலேசியாவில் சூதாட்டம் இல்லாத நான்காவது மாநிலமாக பெர்லிஸ் மாறியுள்ளது.
தாய்லாந்துக்கு அருகில் உள்ள பாடாங் பெசார் நகரில் உள்ள ‘டா மா சாய்’ கடையின் உரிமம் மார்ச் 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அந்தக் கடை மூடப்பட்டது.
இதற்கு முன்னர் பெர்ஸிஸ் மாநிலத்தில் 6 அதிர்ஷ்ட குலுக்கல் கடைகள் இருந்தன. அவற்றின் உரிமத்தை அரசாங்கம் புதுப்பிக்காது என்று அறிவித்தது. அதனால் அவை 2023 ஆண்டில் கட்டங்கட்டமாக மூடப்பட்டன.
சூதாட்ட கடைகள் மூடப்படுவதால் பொருளியல் ரீதியாக இழப்புகள் இருக்கிறது. இருப்பினும் சமூக நலன் கருதியும் பொதுமக்களின் வாழ்க்கையை கருத்தில்கொண்டு இந்த முடிவெடுத்ததாக அதிகாரிகள் கூறினர்.
மலேசியாவின் கிளந்தான், திரெங்கானு, கெடா மாநிலங்களில் சூதாட்ட கடைகள் இல்லை.
கிளந்தான் மாநிலத்தில் 1990 ஆண்டு முதலும் திரெங்கானுவில் 2020ஆம் ஆண்டு முதலும் சூதாட்ட கடைகள் இல்லை. கெடா மாநிலம் கடந்த ஆண்டு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.