கிள்ளான்:
இவ்வாண்டு மொத்தம் 68 மாணவர்கள் முதலாம் வகுப்புக்குப் பதிவாகியிருக்கும் இங்குள்ள நோர்த் ஹமாக் தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் கூடுதல் மாணவர்கள் பயில்வதற்கு வகுப்பறைப் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி மேலாளர் வாரியமும் இணைந்து தீர்வு காணும் நடவடிக்கை முயற்சியில் இறங்கியுள்ளதாக அத்தரப்பினர் மக்கள் ஓசையிடம் தெரிவித்தனர்.
இவ்வாண்டு 68 மாணவர்கள் முதலாம் வகுப்புக்குப் பதிந்துள்ள வேளையில் மொத்தம் 473 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும், மறுபுறம் வகுப்பறைப் பற்றாக்குறைப் பிரச்சினையும் நிலவி வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, எனத் தலைமையாசிரியர் திருமதி சூரியகுமாரி தெரிவித்தார்.
மேலும், இதன் தொடர்பில் கூடுதல் வகுப்பறைகளுக்கான இணைக் கட்டடம் எழுப்பப்பட்டால் வருங்காலத்தில் புதிய மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும், என மேற்பட்ட பள்ளி நிர்வாகத் தரப்பினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாண்டு பள்ளியில் இரு மொழிப் பாடத் திட்ட போதனா முறையும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.