ஒருவரை மரணம் நெருங்குகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?
மனிதர்களை அதிகம் பயப்பட வைக்கும் விஷயங்களில் ஒன்ற மரணம். இது இயற்கையானது, மாற்ற முடியாதது என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தாலும் நமக்கு மரணம் ஏற்பட்டு விடுமோ என்ற பய உணர்வு அடிக்கடி வந்து போவது உண்டு. அதே போல் மரணத்திற்கு பிறகு நாம் என்ன ஆவோம்? நம்முடைய குடும்பம் என்ன ஆகும்? என்பது பற்றியும் யோசிக்காதவர்கள் இருக்க முடியாது. மிக சிலருக்கு மட்டுமே மரணத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கும். மரணம் ஏற்பட போவது அந்த நபர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என சொல்வார்கள். இதை புராணங்களும் உண்மை என உறதிபடுத்துகின்றன.
உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் மரணம் என்பது மறுக்க முடியாதது. பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறப்பை சந்தித்தே தீர வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த மரணம் எப்போது, எப்படி நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் மரணம் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது அந்த குறிப்பிட்ட நபருக்கு முன்கூட்டியே தெரியும் என சிவபுராணம் சொல்கிறது. தனக்கு விரைவில் மரணம் நிகழப் போகிறது என்பதற்கான சில அறிகுறிகளால் முன் கூட்டியே அவர்களுக்கு உணர்த்தப்படும் என்றும், இந்த அறிகுறிகளை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது என சிவ புராணம் சொல்கிறது.
இந்துக்களின் புராணங்களில் மிகவும் புனிதமான புராணங்களில் ஒன்று சிவ புராணம். இந்நூல் சிவபெருமானின் கருணையையும், பண்புகள் மற்றும் மகிமைகளையும் பற்றி விளக்குகிறது. சிவ பெருமானின் குணங்கள், அவரது கடமைகள், அவரது அவதாரங்கள், அவரின் அருளை எப்படி பெற முடியும் என்பது பற்றி விரிவாக விளக்குகிறது. அதோடு ஒரு நபரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான செயல்பாடுகள், இயக்கங்கள் பற்றியும் கூறுகிறது. ஒருவர் இறப்பதற்கு முன் அவர்களுக்கு மரணம் நெருங்குவதை உணர்த்துவதற்கு எந்தெந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்றும் சிவபுராணம் விளக்குகிறது. அது என்னென்ன அறிகுறிகள் என்பதை நாமும் தெரிந்து கொள்ளலாம்
* சிவ புராணத்தின்படி, ஒரு நபரின் இடது கை அல்லது இடது பாகத்தில் அடிக்கடி துடிப்பு ஏற்படுவது, வாயின் மேல் பகுதி வறண்டு போவது ஆகியன அறிகுறிகள் இருந்தால் அவரை மரணம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.* எவர் ஒருவருக்கு சூரியன் மற்றும் சந்திரனைச் சுற்றி சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் ஒளி வட்டம் தெரிகிறதோ அவருக்கு விரைவில் மரணம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம் என சிவபுராணம் சொல்கிறது.
* உடலின் பல பகுதிகளிலோ அல்லது உடல் முழுவதிலுமோ சிவப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் தழும்புகள் வெளிப்படத் துவங்கினால் அவர்களுக்கு மரணம் நெருங்குவதாக சிவ புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
* கண்ணாடி, நெய், நீர் அல்லது எண்ணெய் ஆகியவற்றில் பார்க்கும் போது எவர் ஒருவருக்கு தன்னுடைய பிம்பத்தை காண முடியவில்லையோ அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக சிவபுராணம் சொல்கிறது.
* ஐம்புலன்களும் படிப்படியாக தன்னுடைய செயல்பாட்டினை இழக்க துவங்கினால் இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அவர்கள் மரணத்தை சந்திக்க போகிறார்கள் என்று அர்த்தம் என சிவ புராணம் சொல்கிறது.




















