பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் மரணம்; எண்மர் காயம்

பாட்னா:

பீகார் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மரிச்சா பகுதியில் கோசி ஆற்றின் மீது ரூ. 984 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலை 7 மணியளவில் கட்டுமானப்பணியின் போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். பல தொழிலாளர்கள் காயமடைந்து அலறித் துடித்தனர்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்ததோடு மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களின் உதவியோடு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here