”ஹல்தி நிகழ்ச்சி ஏன் வைத்தீர்கள்? அது வட இந்தியா கொண்டாட்டம். நம் கலாச்சாரத்தை மறந்து விட்டீர்களா?” என தங்களைத் திட்டி வரும் கமென்ட்ஸ் பார்க்கும்போது கல்யாண நேரத்தில் கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார் இந்திரஜா ஷங்கர்.
நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர். இவர் அட்லி இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானார். இவருக்கும் இவரது தாய் மாமா கார்த்திக் என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாகவே இவர்களது ஹல்தி நிகழ்ச்சி கொண்டாட்டமாக நடந்தது.
இந்த வீடியோ, புகைப்படங்களை இந்திரஜா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்துதான் நிறைய பேர், ‘ஹல்தி என்பது வட இந்தியா கலாச்சாரம். நமது நலங்கு நிகழ்ச்சியை ஏன் வைக்கவில்லை? காசு வந்ததும் ஓவர் சீனா?’ என்றபடி எல்லாம் கேட்டு திட்டி கமென்ட் செய்து இருக்கிறார்கள்.
இதற்குதான் இந்திரஜா யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் பதிலளித்துள்ளார். அதாவது, “நிறைய இதுபோன்ற எங்களை திட்டி இருப்பதைப் பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது. நலங்கு என்பது பெரியவர்கள் மட்டும்தான் வைக்க முடியும். ஆனால், ஹல்தி அப்படி இல்லை. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யார் வேண்டுமானாலும் வைக்கலாம்.
ஆட்டம், பாட்டம் என அந்த ஆறு மணி நேரமும் எங்களை மறந்து சந்தோஷமாக இருந்தோம். இந்த சந்தோஷம்தான் முக்கியம். அதை விடுத்து, கல்யாண நேரத்தில் இப்படித் திட்டாதீர்கள். நடிகையாக இருப்பதற்கே எனக்கு வருத்தமாக உள்ளது. ஏனெனில், நடிகர்களின் வாழ்வை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது” எனப் பேசியுள்ளார்.