கோலாலம்பூர்:
மலேசிய மற்றும் சிங்கை காவல்துறை அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில், சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 20 ஆம் தேதி,கோலாலம்பூரில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் அரச மலேசியக் காவல்துறையின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், சிங்கப்பூர்க் காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.
இதில் சிங்கப்பூரர்களைக் குறிவைக்கும் வேலை மோசடிகள் மற்றும் இதர மோசடிகள் மூலம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் மூன்று ஆடவர்களும் அடங்குவர் என்றும், அவர்கள் 23 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
அந்தக் கும்பல் இவ்வாண்டுத் தொடக்கத்தில் இருந்து தனது மோசடி நடவடிக்கைகளைத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர்க் காவல்துறையிடம் தெரியப்படுத்தப்பட்ட குறைந்தது 40 சம்பவங்களில் அக்கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் S$820,000க்கும் அதிகமான பணத்தை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.