பெட்டாலிங் ஜெயா:
இங்குள்ள வீடமைப்பு பகுதியிலுள்ள ரமலான் பசாரில் கடை அமைப்பதற்காக ஏற்பட்ட தகராறு சண்டையில் முடிந்தது தொடர்பில் ஏழு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை (மார்ச் 27) பிற்பகல் 3.26 மணிக்கு குறித்த பசாரில் நடந்த சண்டை குறித்து புகார் கிடைத்ததாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் கூறினார்.
உடனே “காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர் நேற்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சொன்னார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் முட்கரண்டி, பிளாஸ்டிக் நாற்காலி உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று கூறிய ஷாருல், சந்தேக நபர்களில் 4 பேருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் உள்ளதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நாளை (மார்ச் 29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்றும், இவ்வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 148 இன் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.