கேங்ஸ்டரை பேட்டி எடுக்கச் சென்ற யூடியூபர்;அலேக்காக கடத்திய ஆயுதக்குழு!

அமெரிக்க யூடியூபர் யுவர் ஃபெலோ அரப், ஹைதி நாட்டின் கேங்ஸ்டர் ஜிம்மி செரிசியரை நேர்காணல் செய்ய முயன்றார். அப்போது அங்கிருக்கும் ஆயுதக்குழுவால் அவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதி நாட்டின் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவர் தான் ஜிம்மி செரிசியர். இவர் ‘பார்பெக்யூ’ என்றும் அழைக்கப்படுகிறார். ஹைதியின் வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். ஹைதி நாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரியான இவர் நாட்டையே கலங்க வைக்கும் தாதாவாக மாறி அச்சுறுத்தி வருகிறார்.

இவரை பேட்டி எடுக்கதான், ‘யுவர் ஃபெலோ அரப்’ என்று பிரபலமாக அறியப்படும் அமெரிக்க யூடியூபர் அடிசன் பியர் மாலூஃப், ஹைதி சென்றிருக்கிறார். ஆனால், அங்கு ஆயுதக் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யூடியூபர் அடிசன் பியர் மாலூஃபை வெளியில் விடுவதற்காக $600,000 தொகையை கடத்திய கும்பல் டிமாண்ட் செய்துள்ளது. மேலும் $40,000 ஏற்கெனவே மாலூஃபை மீட்க செலுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கடத்தல்காரர்கள் அடுத்தடுத்து பெரும் தொகையை டிமாண்ட் செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. கும்பலின் பிடியில் மாலூஃப் இருப்பதை அவரது நண்பர் இணையத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

யூடியூப்பில் மாலூஃப் 1.4 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். உலகின் ஆபத்தான இடங்களை ஆராய்வதில் அவர் பிரபலமானவர். மலூஃப் கடத்தப்பட்டாரா என்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், ஹைதியில் ஒரு அமெரிக்க குடிமகன் கடத்தப்பட்ட செய்திகளை அறிந்திருப்பதாக அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். மற்றொரு சக யூடியூபர், லார்ட் மைல்ஸ் கடத்தல்காரர்களின் தொலைபேசியைப் பயன்படுத்தி மலூஃப் உடன் நேரடியாகப் பேசியதாகக் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here