தைவானை அடுத்து ஜப்பான்; பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்!

தைவான் நாட்டைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டில் 6.3 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதால், பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

தைவான் நாட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் பலர் மாயமாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதால் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இன்று காலை ஜப்பான் நாட்டின் ஹான்ஷூ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து 32 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதன் காரணமாக, சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலும் கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த நிலநடுக்கம் காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் 12.5 கோடி மக்கள் வசிக்கும் ஜப்பான் தீவுக் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1,500 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. பெரும்பாலானவை மிகவும் பலவீனமானவை என்றாலும், பலமான நிலநடுக்கங்கள் தாக்கும்போது கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அங்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக, சுமார் 18,500 பேர் உயிரிழந்ததோடு சுனாமியும் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜப்பானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதை உணர்ந்த நாய்க்குட்டி ஒன்று, தனது பராமரிப்பாளரை எச்சரிக்க வீட்டிற்குள் அங்குமிங்கும் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here