இஸ்கண்டார் புத்திரி:
புக்கிட் இண்டாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட சண்டையில் ஈடுபட்ட 35 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டையில் தான் தாக்கப்பட்டதாக 26 வயது இளைஞன் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து, குறித்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக, இஸ்கண்டார் புத்திரி மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் இப்ராஹிம் மாட் சோம் கூறினார்.
“நேற்று முந்தினம் (ஏப்ரல் 6) இரு ஆண்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே சண்டை நடப்பதைக் காட்டும் சண்டையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
“பாதிக்கப்பட்டவரை குறித்த பெண்ணின் கணவர் தாக்கியதாகவும், இச்சண்டை தொடர்பில் இருவரிடமும் நடத்திய விசாரணையில், பொறாமை காரணமாக சண்டை ஏற்பட்டது என்று தெரியவந்தது,” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 7) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323 மற்றும் பிரிவு 506 இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தேக நபர் இன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்,” என்றும் அவர் மேலும் கூறினார்.