(எம்.எஸ்.மணியம்)
பந்திங், ஏப்.
தடகள போட்டிகளில் சாதனை படைத்ததற்காக ஃபிட்மா வெட்ரன் கிளப்பின் தடகள வீரர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.
அண்மையில் கோலசிலாங்கூர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலசிலாங்கூர் பொது அரங்கில் நடைபெற்றது. இதில் ஃபிட்மா வெட்ரன் குழுவின் 16 மாஸ்டர் உறுப்பினர்கள் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதாக ஃபிட்மா வெட்ரன் குழுவின் தலைவர் எம்.முருகன் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கான அனுபவப் பிரிவு என்ற ஒரே ஒரு பிரிவில் மட்டுமே பங்கு பெற்றனர்.
பதக்கம் வென்ற அனைவருக்கும் ரொக்க ஊக்கத்தொகை, அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஃபிட்மா வீரர்களுக்கு தற்போது உலக தடகள பயிற்சியாளர்கள் கல்விச் சான்றிதழ் பெற்ற ஒரு தகுதி வாய்ந்த பயிற்சியாளரான எம்.எஸ்.அமுதா ஆறுமுகம் பயிற்சி வழங்கி வருகிறார்.
அதில் ஒரு பகுதியாக வரும் ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக ஃபிட்மா கிளப் உறுப்பினர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கோலசிலாங்கூர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபிட்மா கிளப் 6 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது என்று எம்.முருகன் தெரிவித்தார். மேலும் குழுவின் இரு உறுப்பினர்களான சுரேஷ் குமார், முருகப் பெருமாள் தலா இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.