கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1 வருகை மண்டபத்தில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது. ஆனால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறுகையில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, ஒரு நபர் இரண்டு துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறினார்.
போலீசார் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதுடன் வடக்கிற்கு தப்பிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர் என்று அவர் இன்று இங்கு தொடர்பு கொண்ட போது கூறினார். இந்த சம்பவம் தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து உருவானது என்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லது குழுக்களுடன் தொடர்பில்லாதது என்றும் அவர் கூறினார்.
உம்ரா குழுவொன்றின் வருகைக்காகக் காத்திருந்து தனது மனைவியை சந்தேக நபர் சுட்டுக் கொல்ல எண்ணியிருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். சம்பவத்தின் நோக்கம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் குற்றவியல் சட்டம் பிரிவு 307 மற்றும் துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சியாக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹுசைன் கூறினார்.